பொதுவாக நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய ‘பொரியாலிஸ்’ என்ற இயற்கையான ஒளி அமைப்பு சிங்கப்பூர் கரையோரப் பூந்தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்படுகிறது.
சிங்கப்பூர் மக்கள் மே 5ஆம் தேதி முதல் இந்தக் கண்கவர் லேசர் விளக்குகளால் உருவாக்கப்படும் கண்கவர் காட்சியமைப்பைக் கண்டுகளிக்கலாம்
ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு பிரத்யேக முன்னோட்டத்தின்போது, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் டான் ஆச்சரின் இந்த ஒளி அமைப்பை கரையோரப் பூந்தோட்டத்தில் அமைக்கும் முறையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் சென்று பார்வையிட்டது.
30 லேசர் விளக்குகள் மற்றும் கிளவுட் இயந்திரங்கள் கரையோரப் பூந்தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பட்டைகளில் பொருத்தப்பட்டன. இவற்றின் மூலம் ‘அரோரா பொரியாலிஸ்’ எனும் காட்சியமைப்பு உருவாக்க முடியும்.
இயந்திரங்களால் உருவாக்கப்படும் மேகத் துகள்கள் வழியாக லேசர் ஒளி கடந்து செல்வதால் “அரோரா” காட்சியமைப்பு உருவாகிறது.
பிரஞ்சு இசையமைப்பாளர் குய்லூம் டெஸ்போயிஸ் இசையுடன் இணந்து இந்த ஒளி அமைப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இவ்வண்ணக் காட்சியமைப்பை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி முதல் 9.30 மணி வரையிலும் திங்கட்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரையிலும் கரையோரப் பூந்தோட்டத்தில் கண்டுகளிக்கலாம்.
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.