சிங்கப்பூர் வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு, ஏப்ரல் 24ஆம் தேதி, பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு பேர் கொண்ட அக்குழுவிற்கு, நிதிச் சேவைகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பேட்ரிக் மெக்ஹென்றி தலைமை தாங்குகிறார்.
அக்குழுவினர், துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கையும் சந்தித்ததாக ஏப்ரல் 25ஆம் தேதி வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஏப்ரல் 24 முதல் 26ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
பிரதமர், துணைப் பிரதமருடனான சந்திப்புகளில் நீண்டகால, வலுவான, பன்முகத்தன்மை வாய்ந்த இருதரப்பு உறவுகளை சிங்கப்பூரும் அமெரிக்காவும் மறுஉறுதி செய்தன. நிதித்துறை சார்ந்த ஆழமான உறவுகளும் அவற்றில் அடங்கும்.
பொருளியல், அரசதந்திரம், ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயல்படுவதைப் பிரதமர் லீயும் துணைப் பிரதமர் வோங்கும் வரவேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.
அமெரிக்கப் பேராளர் குழுவிற்குத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தேநீர் விருந்தளித்துச் சிறப்பித்தார்.