பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சலுகைகளை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏறத்தாழ 40 ஊழியர்கள் அந்த வங்கியிலிருந்து கடந்த வாரம் விலகியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நூற்றுக்கணக்கானோரிடம் வங்கி விசாரணை நடத்தியதாக அறியப்படுகிறது. சிலரை அது பதவி நீக்கம் செய்தது.
இந்த விசாரணை குறித்து efinancialcareers.com எனும் நிதித்துறை வாழ்க்கைத் தொழில் இணையவாசலில் ஏப்ரல் 24ஆம் தேதியன்று முதன்முதலாகத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
வங்கியின் விசாரணை, ஒழுங்குமுறை கட்டமைப்பின்படி இந்த விவகாரம் கையாளப்படும் என்று அவர் கூறினார்.
ஊழியர் மருத்துவச் சலுகை முறைகேடு தொடர்பாக ஓசிபிசி வங்கியின் தனியார் வங்கிப் பிரிவான பேங்க் ஆஃப் சிங்கப்பூர் 2023ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கியதாக சிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த விசாரணையில் சிஐஎம்பி பிளாசாவில் அமைந்துள்ள தாம்சன் அண்ட் தாம்சன் (ரெட்லிங்க் கேர்) மருந்தகத்துக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் மருத்துவக் காப்புறுதி திட்டத்தின்கீழ் அதன் ஊழியர்கள் மருத்துவ, பல்மருத்துவச் செலவுகளுக்காக $10,500 வரை பெற முடியும்.
இந்நிலையில், உயிர்ச் சத்துகள், சருமப் பராமரிப்புக்கான பொருள்கள் போன்றவற்றை வாங்க மருத்துவக் காப்புறுதித் திட்டம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு செய்ய ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.
வெளிநோயாளி சிகிச்சை, மருத்துவர்கள் தரும் மருந்துகள், அழகியலுக்கு உட்படாத அத்தியாவசிய பல்மருத்துவச் சேவை, தடுப்பூசி, எக்ஸ்-ரே, ரத்தப் பரிசோதனை போன்றவற்றுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சையைப் பயன்படுத்த அனுமதி உள்ளது.
இந்த முறைகேடு எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படவில்லை.
ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி அனுமதிக்கப்படாத சேவைகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஊழியர்களிடம் வங்கி தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
மருத்துவ சலுகையைத் தவறாகப் பயன்படுத்திய சிலருக்கு வங்கி போனஸ் தரவில்லை.