குறுகியகாலத்தில் ‘ஏஐ’ திறன்களைக் கற்றுப் போட்டியிட்ட மாணவர்கள்

குறுகியகாலத்தில் ‘ஏஐ’ திறன்களைக் கற்றுப் போட்டியிட்ட மாணவர்கள்

2 mins read
3138b9fa-619f-46b4-9c88-bcfe5baf62e5
உயர்நிலை 1, 2 பிரிவில் தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த வெற்றியாளர்கள் (இடமிருந்து) சுகுமார் ஜெனிஷா, தியா புருஷோத்தமன், ஷெளனா கேஷினி ஆகியோருடன் தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வி. - படம்: அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழு
multi-img1 of 3

தமிழ் ஆர்வமும் போட்டித்தன்மையும்மிக்க நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுகியகாலத்தில் செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கூறுகளைக் கற்று, காணொளி தயாரிக்கும் போட்டி ஒன்றில் குழுக்களாகப் பொருதினர்.

தமிழ்மொழி விழா 2024ஐ ஒட்டி அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழுவின் ‘ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு’ என்ற அந்தப் போட்டியின் இறுதி அங்கம், ஏப்ரல் 27ஆம் தேதி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்றது.

இந்த அமைப்பினர் பிப்ரவரி 17ஆம் தேதி நடத்திய பயிற்சிப் பயிலரங்கில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, பின் அவர்களில் 250 மாணவர்கள் குழுக்களாகப் போட்டிகளில் கலந்துகொண்டு கற்ற திறன்களைக் குறுங்காணொளிகள் உருவாக்கப் பயன்படுத்தினர்.

போட்டியின் இறுதிச்சுற்று உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கும் உயர்நிலை 3, 4 மாணவர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. முதல் பிரிவில் தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியின் அணியும் இரண்டவது பிரிவில் செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலைய அணியும் முதலிடம் வென்றன..

தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த தியா புருஷோத்தமன், சுகுமார் ஜெனிஷா, ஷெளனா கேஷினி ஆகியோரும் செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலையத்தின் ராமசாமி காசி, வெங்கடேஷ் அஸ்வத் நரேன் ரதுல் ராமசந்திரன் ஆகியோரும் வெற்றிக்கோப்பைகளைத் தட்டிச் சென்றனர்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில, மொழியியல் இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். செயற்கை நுண்ணறிவுக்கு ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் ஈடுகொடுத்து மாணவர்களின் ஆய்வுத்திறன்களைச் சோதிப்பது சாதாரணமான ஒன்றன்று என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் ஆற்றல், குறிப்பாகக் கட்டுரைகளை எழுதும் ஆற்றல் விரைவாக வளரும் நேரத்தில் தகவல்களை முறையாக மேற்கோள்காட்டிக் கட்டுரை எழுதும் முறை பற்றி மாணவர்கள் கேள்வி எழுப்புவதாக இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன் கூறினார்.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் பரிசுகளை வழங்கினார். தற்போதைய உலக நடப்புகளில் முக்கிய இடத்தைப் பிடித்த செயற்கை நுண்ணறிவு பற்றித் தாம் இதுவரை அறிந்திடாத புதிய கூறுகளை மாணவர்களின் படைப்புகளிலிருந்து கற்றுக்கொண்டதாகத் திரு தினகரன் கூறினார்.

தமிழ் ஆசிரியர்கள், தமிழ்த் துறைத் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் என ஊரே கூடி இந்தத் தேரை வெற்றிகரமாக இழுத்திருப்பதாகத் திரு தினகரன் பாராட்டினார்.

செயற்குழு உறுப்பினர்கள் லதா அழகப்பனும் கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரனும் பயிற்சிப் பயிலரங்கையும் போட்டிகளையும் நடத்தினர். பிப்ரவரி 17ஆம் தேதி தேசியப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கை மாணவர்களுக்கு நடத்திய பாஸ்கரன், மாணவர்கள் குறுகியகாலத்தில் இவற்றைக் கற்று, தங்கள் திறனை நிரூபித்ததைக் கண்டு பெருமை அடைவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுஉயர்நிலைப் பள்ளி