சிங்கப்பூர் இளையர் காற்பந்து லீக் போட்டி ஆட்டத்துக்காக இரு குழுக்கள் புக்கிட் கொம்பாக் விளையாட்டரங்கத்துக்குச் சென்றபோது அது மூடப்பட்டிருந்ததைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உட்லண்ட்ஸ் லயன்ஸ் மற்றும் ஹவ்காங் யுனைடெட் ஆகியவற்றின் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான குழுக்களிடையிலான ஆட்டம் ஏப்ரல் 27ஆம் தேதி காலை புக்கிட் கொம்பாக் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சம்பந்தப்பட்ட குழுக்கள் கூறின.
இதனால் அக்குழுவினர் காலை 7 மணிக்கு விளையாட்டரங்கை அடைந்தனர். நடுவர்களும் மற்ற அதிகாரிகளும் விளையாட்டரங்கிற்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திடலில் வில்வித்தைப் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை அங்கு வில்வித்தைப் போட்டி நடைபெறும் என்று விளையாட்டரங்கில் உள்ள அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, வேறு வழியின்றி காற்பந்தாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இது ஆட்டக்காரர்கள், ஆட்டக்காரர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட குழுக்களின் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரை எரிச்சல் அடையச் செய்தது.
அதே நாள், அதே விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு கேலாங் யுனைடெட் மற்றும் தேசிய மேம்பாட்டு மையத்தின் 13 வயதுக்கு உட்பட்ட மகளிர் குழுக்களிடையிலான காற்பந்தாட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
காற்பந்தாட்டத்துக்கு மாற்று விளையாட்டரங்காக ஜூரோங் டவுனில் உள்ள ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு மையம் கடைசி நேரத்தில் வழங்கப்பட்டது. ஆனால் அதை உட்லண்ட்ஸ் லயன்ஸ் குழுவும் ஹவ்காங் குழுவும் ஏற்க மறுத்தன.
விளையாட்டரங்குகள் குறித்து சிங்கப்பூர் இளையர் காற்பந்து லீக்கின் ஏற்பாட்டாளர்களிடையே தெளிவற்ற தகவல் பரிமாற்றத்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கமும் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பும் தெரிவித்துள்ளன.
குழப்பத்துக்கு அவை மன்னிப்பு கேட்டுக்கொண்டன.
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டங்களைக் கூடிய விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.