மின்னிலக்கச் செய்தித் தளமான யாஹூ, சிங்கப்பூரில் உள்ள அதன் செய்தி, சமூக ஊடகக் குழுவினரை ஆட்குறைப்பு செய்வதாகக் கூறப்படுகிறது.
யாஹூ நடத்திய முழுமையான மதிப்பீட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
யாஹூவின் இந்த நடவடிக்கையால் 17 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘தி எட்ஜ் சிங்கப்பூர்’ செய்தி நிறுவனம் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) தெரிவித்தது. மே 7ஆம் தேதிக்குப் பிறகு அவர்கள் யாஹூவில் இருந்து வெளியேறுவர்.
அவர்கள் பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டுக்கும் இரண்டு வாரச் சம்பளத்துக்கும் சற்று அதிகமாக பெறுவர் எனப் பெயர் வெளியிடப்படாத தரப்பை மேற்கோள்காட்டி ‘தி எட்ஜ் சிங்கப்பூர்’ குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி மனிதவள பிரதிநிதி ஒருவரைச் சந்தித்தனர்.
யாஹூவுக்கு செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஹஃப்போஸ்ட், ஏஎஃப்பி நியூஸ், ராய்ட்டர்ஸ், எட்ஜ்பிரோப், தி எட்ஜ் சிங்கப்பூர் உள்ளிட்டவை அடங்கும்.
ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களிடம் அந்நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரியப்படுத்தப்பட்டதாக தி எட்ஜ் சிங்கப்பூர் தெரிவித்தது.
2022ல் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏழு செய்தியாளர்களை யாஹூ ஆட்குறைப்பு செய்தது. 2016லும் அந்நிறுவனம் இங்கு ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.