வாஷிங்டன்: சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடப்புக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஏப்ரல் 29ஆம் தேதியன்று விருந்துபசரிப்பு நடைபெற்றது.
இதற்கு அமெரிக்க-ஆசியான் வர்த்தக மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரித்து, இருநாட்டுத் தலைவர்களுக்கிடையே நம்பிக்கையை வலுப்படுத்தி, இருநாட்டு மக்களிடையே இணைப்பை உருவாக்கி சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பேரளவில் பலன் அளித்துள்ளது,” என்று விருந்துபசரிப்பில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகளின் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறை ஆகியவற்றால் இருநாடுகள் எவ்வாறு பலனடையலாம் என்பதை சிங்கப்பூர்-அமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றி நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.
2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புருணையில் நள்ளிரவு நேரத்தில் கோல்ஃப் விளையாடிய பிறகு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் முடிவெடுத்ததைத் திரு கான் நினைவுகூர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு 11 பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் திரு கான் சுட்டினார்.
ஆனால் அதற்கான விதை 1983ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டதாகத் திரு கான் கூறினார்.
அப்போதைய அமெரிக்க அதிபர் ரோனல்ட் ரேகன், ஆசியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அமெரிக்காவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான பொருளியல் உறவை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.
ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருடன் மட்டுமே அமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.