கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஒருவர் வேறு மூவருடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு லஞ்சமாக $88,0000க்கும் மேலான தொகையை வழங்கினார்.
சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகத்தின் கிளை நிறுவனம் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம். இதையும் ‘நைட் சஃபாரி’ என்ற இரவு நேர விலங்கியல் தோட்டத்தையும் ‘சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகம் ஏற்று நடத்துகிறது.
சோங் யுன் சியா என்ற 40 வயது ஆடவர் கே கே அயர்ன் எஞ்சினியரிங் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் வேறு மூவருடன் இணைந்து பேரி சோங் பங் வீ, வயது 57, என்பவருக்கு நான்கு சந்தர்ப்பங்களில் பணம் கொடுக்கக் கூட்டுச்சதியில் ஈடுபட்டார். இவை யாவும் 2016ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இவையாவும் கே கே அயர்ன் எஞ்சினியரிங் நிறுவனம் சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகத்துடனான வர்த்தக நலன்களைக் கருத்தில்கொண்டு வழங்கப்பட்டன. சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகத்துக்கு தற்பொழுது மண்டாய் வனவிலங்குக் குழுமம் என்ற பெயரில் செயல்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று (மே 2) மலேசியரான சோங் யுன் சியா ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இவர் மீதான மேலும் 19 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி கூறிய அரசு வழக்கறிஞர்களான கெல்வின் சோங், ஷாமினி ஜோசஃப், டேரன் சிம் ஆகியோர், இந்த ஊழல் காரணமாக டபிள்யூ ஆர் எஸ் எனப்படும் சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகம், கே கே அயர்ன் எஞ்சினியரிங் நிறுவனத்துக்குப் பல ஒப்பந்தங்களை வழங்கியதாகக் கூறினர். அவற்றின் மதிப்பு $1 மில்லியனுக்கும் மேல் என்றும் நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஊழலால் சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகத்துக்கு கிட்டத்தட்ட $88,350 இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோங் யுன் சியா, கோ கியன் ஹீ, டோ சாய் கியட், டோ யோங் சூன் ஆகிய மற்ற மூவருடன் இணைந்து சிங்கப்பூர் வனவிலக்குக் காப்பகத்தைச் சேர்ந்த பேரி சோங்குக்கு லஞ்சம் தந்ததாக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் விளக்கினர்.