சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டேலர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிகள் சில்லறை விற்பனை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் மாதங்களில் போக்கு மாறக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 2.7 விழுக்காடு வளர்ச்சிகண்டது. பிப்ரவரி மாதம் பதிவான 8.6 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவாகும்.
புள்ளி விவரப் பிரிவு வெள்ளிக்கிழமையன்று (மே 3) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்தன.
வாகன விற்பனையைக் கருத்தில்கொள்ளாதபோது சில்லறை விற்பனை இரண்டு விழுக்காடு கூடியது. பிப்ரவரி மாதம் இந்த விகிதம் 9.5 விழுக்காடாகப் பதிவானது.
எனினும், அந்தந்த காலகட்டத்துக்கான அம்சங்களைக் கருத்தில்கொண்ட பிறகு மாத அடிப்படையில் சில்லறை விற்பனை ஒரு விழுக்காடு குறைந்தது.
மாத அடிப்படையில் உணவு, மதுபானத்தில்தான் சில்லறை விற்பனை ஆக அதிக வளர்ச்சிகண்டது. வளர்ச்சி விகிதம் 15.1 விழுக்காடாகப் பதிவானது.
அதற்கு அடுத்த நிலையில் ஒப்பனை, கழிவறை மற்றும் மருத்துவப் பொருள்கள் வந்தன. அவற்றில் சில்லறை விற்பனை 8.8 விழுக்காடு கூடியது.
அதற்கு அடுத்தபடியாக பல்பொருள் கடைகளில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்) சில்லறை விற்பனை 7.7 விழுக்காடு அதிகரித்தது.
இதர சில துறைகளில் மாத அடிப்படையில் சில்லறை விற்பனை சரிந்தது. கணினி, தொலைத்தொடர்புப் பொருள்களை உள்ளடக்கும் அதிக விலையான பொருள்கள் பிரிவில் சில்லறை விற்பனை 8.5 விழுக்காடு குறைந்தது. இதுவே ஆக அதிகச் சரிவைச் சந்தித்த பிரிவாகும்.
அறைகலன், வீட்டுப் பொருள்கள் பிரிவில் சில்லறை விற்பனை 7.9 விழுக்காடு குறைந்தது.
மார்ச் மாதத்தில் மொத்தம் 4.2 பில்லியன் வெள்ளி மதிப்பிலான சில்லறை விற்பனைப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதில் 11.7 விழுக்காடு இணையத்தில் இடம்பெற்ற பரிவர்த்தனைகளின் மதிப்பாகும். பிப்ரவரி மாதம் பதிவான 10.8 விழுக்காட்டைக் காட்டிலும் அந்த விகிதம் அதிகமாகும்.