சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்தின் தற்கொலைத் தடுப்புப் பிரிவின் 55வது ஆண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 4) அன்று ஒன் ஃபேரர் ஹோட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விருந்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இளைஞர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மின்னிலக்கச் சாதனத் திரை முன்னால் பிள்ளைகள் செலவிடும் நேரம், சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாடு ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டும் எனத் துணை பிரதமர் வோங் அவ்விருந்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் குறைந்த விளையாட்டு, கூடுதல் மின்னிலக்கச் சாதனத்தின் பயன்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட குழந்தைப் பருவத்தில் பிள்ளைகள் வளர்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
“சில சிறார்கள் மிகச் சிறிய வயதிலேயே அதாவது, அவர்கள் கைக்குழந்தைகளாகவோ மழலைகளாகவோ இருக்கும்போதே இதுபோன்ற வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றனர். இதுவே அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பிரச்சினையாக இருக்கலாம்.
“ சிங்கப்பூரில், இதுதொடர்பான ஆராய்ச்சி முன்பு நடத்தப்பட்டது,” என அவர் பிள்ளைகளின் மனநலத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பேசும்போது தெரிவித்தார்.
“குழந்தைப் பருவத்தில் மின்னிலக்க சாதனத்தின் முன்னால் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் கற்றலுக்கும் சுய கட்டுப்பாட்டுக்கும் தேவையான அறிவாற்றல் திறன்களின் வளர்ச்சியையும் சமூக உணர்ச்சித் திறனையும் மிக மோசமாகப் பாதிக்கும்.
“மனச்சோர்வு போன்ற மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க இது ஒரு காரணமாக அமைகிறது,” என்று அவர் எடுத்துரைத்தார்.
“மின்னிலக்க சாதனத்தின் முன்னால் வளர்ந்த பிள்ளைகள் செலவிடும் அனைத்து நேரங்களும் மோசமானவை அல்ல. ஏனெனில், செய்திகளைப் படித்து அறிந்துகொள்வது போன்ற பயனுள்ள செயல்களுக்காகவும் அவர்கள் அதில் நேரத்தைச் செலவிடலாம். ஆனால், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்க கூடும்,” என்றார் திரு வோங்.
“ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆப் ஸ்டோர்’ மற்றும் கூகிள் நிறுவனத்தின் ‘பிளே ஸ்டோர்’ ஆகியவற்றில் தொடங்கி, அவர்களின் சேவைகளில் வலுவான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த முக்கியத் தொழில்நுட்பத் தளங்களுடன் இணைந்து அரசாங்கம் அண்மையில் பணியாற்றியது. இதன்மூலம், பிள்ளைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்த முடியும்,” என்று திரு வோங் பிள்ளகளின் மனநலத்தைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார்.