‘மாரிஸ் ஸ்டெல்லா ஹை ஸ்கூல்’ பள்ளிக்கு புதிய வடிவம் கொடுக்கும் வகையில் 2027லிருந்து 2029 வரை புதிதாக மீண்டும் கட்டப்படும். தொடக்கநிலை, உயர்நிலை ஆகிய இரண்டுக்கும் புதிய பள்ளி சிறந்த வசதிகளைக் கொண்டிருக்கும்.
2027ஆம் ஆண்டிலிருந்து மாத்தார் சாலையில் உள்ள முந்தைய மெக்பர்சன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாரிஸ் ஸ்டெல்லா தொடக்கப் பள்ளி தற்காலிகமாகச் செயல்படும். அதே ஆண்டிலிருந்து முதல் முறையாக அதன் தொடக்கப்பள்ளி பிரிவில் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றனர்.
உயர்நிலைப்பள்ளி பிரிவு, ஜாலான் டாமாயில் உள்ள முந்தைய பிடோக் நார்த் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்படும்.
மாரிஸ் ஸ்டெல்லா உயர் பள்ளி 1958ல் நிறுவப்பட்டது. அது, 1966ஆம் ஆண்டில் தற்போதைய மவுண்ட் வெர்னன் இடத்துக்கு மாறியது.
கத்தோலிக்க ஆண்கள் பள்ளியான மாரிஸ் ஸ்டெல்லா, வலுவான இருமொழி கல்விக்குப் பெயர்போனது. சுகாதார அமைச்சர் ஓங் யி காங் உட்பட பல பிரமுகர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்றவர்கள்.
மே 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் உள்ளூர் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக மாரிஸ் ஸ்டெல்லா(தொடக்கநிலை) மாற்றப்படுகிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
பெரிய அளவில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக தற்காலிக இடத்தில் இரு வேளைகளில் மாரிஸ் ஸ்டெல்லா (தொடக்கநிலை) பள்ளி செயல்படும். அதாவது தொடக்கநிலை 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்கள் பிற்பகல் வேளையிலும் தொடக்கநிலை 3 முதல் 6ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலை வேளையிலும் வகுப்புகளில் படிப்பார்கள்.
மாரிஸ் ஸ்டெல்லா பள்ளி 2030ஆம் ஆண்டுவாக்கில் முழுமையாக கட்டி முடித்து தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதன் நிரந்தரமான இடத்தில் அப்பள்ளி ஒரே வேளை நடைமுறைக்கு மீண்டும் மாறிவிடும்.
தற்சமயம் மாரிஸ் ஸ்டெல்லா பள்ளி (உயர்நிலை) ஆண்களுக்கான பள்ளியாகவே நீடிக்கும்.
மாரிஸ் ஸ்டெல்லா உயர் பள்ளியின் முதல்வர் போய் எங் செங், மறுபடியும் கட்டப்படும் பள்ளியில் பள்ளிக்கான திடல், விளையாட்டுக்கான உள்ளரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிவித்தார்.
தற்போதைய பள்ளி வளாகத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு போய், தற்போதைய இடத்திலிருந்து தற்காலிகப் பள்ளி வளாகம் வெகு தொலைவில் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் இருக்காது என்று குறிப்பிட்டார்.
மாத்தார் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளிக்கான தற்காலிக வளாகம், தற்போதைய மவுண்ட் வெர்னன் இடத்திலிருந்து 1.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜாலான் டாமாயில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கான தற்காலிக வளாகம், தற்போதைய இடத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மாரிஸ் ஸ்டெல்லா பள்ளியின் வாயில் கதவு மாணவர்களுக்கு மறக்க முடியாத சின்னமாக விளங்குகிறது. புதிய பள்ளி கட்டப்படும்போது அக்கதவை தக்க வைத்துக் கொள்ள பள்ளி விரும்புகிறது.