மொபயில் கார்டியனின் தரவுத்தளம் ஊடுருவப்பட்டு அதில் பள்ளி ஊழியர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததை அடுத்து, அதுதொடர்பாக தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.
மொபயில் கார்டியனின் தரவுத்தளம் ஏப்ரல் மாதம் ஊடுருவப்பட்டது. அந்நிறுவனத்தின் தலைமையகம் பிரிட்டனில் உள்ளது.
மொபயில் கார்டியனின் நிர்வாக இணையவாசலில் உள்ள ஆதரவுக் கணக்கை தனிநபர் ஒருவர் நிறுவனத்தின் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைப் பயன்படுத்தி அந்த நபர் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உட்பட ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக சிங்கப்பூரெங்கும் உள்ள 127 பள்ளிகள் பாதிக்கப்பட்டன.
22,000 பள்ளி ஊழியர்கள், 67,000 பெற்றோர் ஆகியோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக மே 7ஆம் தேதியன்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
இந்த விவகாரத்தை முன்னிட்டு மொபயில் கார்டியனின் இணையம் மற்றும் கணினி கட்டமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யவும் இதுபோன்ற இணைய ஊடுருவல் இனி நிகழாதிருக்க பரிந்துரைகளை முன்வைக்கவும் தடயவியல் புலன்விசாரணை அதிகாரி ஒருவரை அந்நிறுவனம் நியமிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.

