வடகொரியாவுக்கு போக்கா, நெஸ்கஃபே உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பானங்களை விநியோகித்ததாக ஒரு நிறுவனம், இருவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் இதனை நிறுவனமும் அந்த இரண்டு பேரும் மறுத்துள்ளனர்.
எலுவா இண்டர்நேஷனல் என்ற அந்த நிறுவனம், தடை செய்யப்பட்ட வடகொரியாவுக்கு பானங்களை விநியோகித்த 11 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.
இதர இரண்டு பேர், எலுவா இண்டர்நேஷனல் இயக்குநர் இயூஜின் லீ சுன் பூங், ‘ஸ்கைலைன் ஷிப்பிங்’ என்ற சரக்கு நிறுவனத்துடன் தொடர்புடைய கோ போ சூ என்ற பெண்.
லீக்கு வயது 49, கோவுக்கு வயது 57. இருவரும் சிங்கப்பூரர்கள்.
சிங்கப்பூரிலிருந்து ஒருவர், குறிப்பிட்ட ஆடம்பரப் பொருள்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஐநா தடை விதித்துள்ளது. இவற்றில் ஒப்பனைப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், தொலைக்காட்சி, திறன்பேசி போன்ற பொருள்களும் அடங்கும்.
எலுவா இண்டர்நேஷனல், ஐநா விதிமுறையின்கீழ் ஒன்பது குற்றச்சாட்டுகளையும் ஏற்றுமதி, இறக்குமதி விதிமுறையின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறது. லீ மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஏறக்குறைய S$661,850 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருள்கள் சீனாவின் கிழக்கில் உள்ள டாலியன் நகரம் வழியாக வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. டாலியன் நகரம் வடகொரியத் தலைநகரான பியோங்யாங்கிற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

