“அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்த நபர் என்று குறிப்பிடப்படுவது யாரோ ஒருவர் குற்றம் புரிந்ததாக பொருள்படாது. ஆனால், அவர்கள் சிங்கப்பூர் அரசியலுடனும் வெளிநாட்டு நிறுவனங்களுடனும் தொடர்பில் இருப்பவர்கள் என்பதோடு எளிதில் அடிபணியக்கூடிய ஆபத்தைச் சுமந்திருப்பவர்கள்,” என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இஸ்தானாவில் ஏப்ரல் 26ஆம் தேதி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தலையீடு மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகள் சட்டம் (ஃபிகா) பற்றி திரு லீ குறிப்பிட்டுப் பேசினார்.
வெளிநாட்டு விரோதச் செயல்பாடுகளையும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தங்கள் சொந்த நலனுக்காக இங்கு பயன்படுத்துபவர்களையும் சமாளிக்கக்கூடியது அந்தச் சட்டம் என்றார் பிரதமர் லீ.
“சிங்கப்பூர் அரசியலுடன் தொடர்பு வைத்திருப்போரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்று ஃபிகா சட்டம் வகைப்படுத்துகிறது.
“அரசியல் செயல்பாடு உடையவராக இருந்து அதேநேரம் அவருக்கு வெளிநாட்டுத் தொடர்பு இல்லை எனில் அவரால் அச்சுறுத்தல் இல்லை.
“இருப்பினும், சில வெளிநாட்டுச் செயல்பாடு உடையவர்கள் அவருடன் நட்பு வைத்துக்கொள்ள முடிவு செய்யலாம். அந்த நட்பு கைகூடினால் அவர் அச்சுறுத்தலுக்கு உரியவர் ஆகலாம்,” என்று திரு லீ விவரித்தார்.
பிரதமர் என்ற முறையில் தாமும் தமது அமைச்சர்களும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் என்றார் அவர்.
மக்கள் செயல் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அரசியல் முக்கியவத்தும் வாய்ந்தவை. ஃபிகா சட்டத்தின்கீழ் ஒவ்வோர் எம்.பி.யும் அமைச்சரும் அரசியல் கட்சிகளும் தங்களுக்கு இருக்கும் தொடர்பு அல்லது இணைப்புகளை அறிவிக்க வேண்டும் என்றார் பிரதமர்.

