போக்கிமான் அட்டைகள் அடங்கிய இரண்டு பெட்டிகளைக் கடைகளிலிருந்து திருடி, அவற்றை இணையத்தில் விற்ற 23 வயதான தாதிக்கு ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு செவ்வாய்க்கிழமையன்று (மே 14) விதிக்கப்பட்டது.
ஃபாங் ஜியா வெய் என்ற அந்தத் தாதி, மலேசியாவைச் சேர்ந்தவர்.
தன் கடனை அடைப்பதற்காக ஃபாங் இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அவர் திருடி விற்ற போக்கிமான் அட்டைகள் அடங்கிய பெட்டிகளின் மொத்த மதிப்பு $480க்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு திருட்டுக்குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் நிரந்தவாசியான ஃபாங்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனையின் ஒரு பகுதியாக, அவர் ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
மேலும், 40 மணிநேரம் சமூகச் சேவை செய்ய வேண்டும்.
ஃபாங்கின் நன்னடத்தைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அவரது பெற்றோர் $5,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃபாங் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.
ஒவ்வொரு திருட்டுக்குற்றத்திற்கும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

