US$443.800 (S$596,000) கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க மொத்தவிற்பனை வர்த்தக நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அளித்த குற்றத்திற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரரான ஜெஸ்ஸி கைரா மல்ஹோத்ரா, 41, என்பவர் மீது கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மோசடி நோக்கத்திற்காக நிறுவப்பட்ட ஃபியூச்சர் டிரேடர்ஸ் என்னும் நிறுவனத்தில் அதன் நோக்கத்தைத் தெரிந்திருந்தும் அதில் அந்தப் பெண் இடம்பெற்று இருந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
வங்கி ஒன்றில் மோசடி செய்வதற்கான சதிச்செயலில் ஈடுபட்ட குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டது.
2019 டிசம்பர் முதல் 2020 பிப்ரவரி வரை 38 வயது ஆடவர் ஒருவருடன் இணைந்து சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றையும் நான்கு நிறுவன வங்கிக் கணக்குகளையும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் மல்ஹோத்ரா ஈடுபட்டதாக மே 15ஆம் தேதி காவல்துறை கூறியது.
பணம் பெற்றுக்கொண்டு அதற்குக் கைமாறாக இச்செயல்களில் அவர் ஈடுபட்டதாகவும் அது தெரிவித்தது.