சான்ஃபிரான்சிஸ்கோ புறப்பட்டுச் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை (மே 14) சிங்கப்பூரை விட்டுப் புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அந்த விமானம் அவசரமாகத் திரும்பி வந்தது.
சம்பவம் நிகழ்ந்த வேளையில் அந்த விமானத்தில் 197 பயணிகளும் 14 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும் அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ‘சான்ஃபிரான்சிஸ்கோ குரோனிக்கல்’ செய்தித்தாள் தெரிவித்தது.
யுஏ28 என்னும் அந்த விமானம் அன்று இரவு 11.04 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரை இறங்கியதாக விமான நிலையப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு வெள்ளிக்கிழமை (மே 17) அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, அந்த விமானம் இரவு 9.37 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்பட்டது. கோளாறு கண்டறியப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருமுன்னர் அந்த விமானம் 31,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்ததாக ‘ஏவியேஷன் ஏ2இஸட்’ இணையத்தளம் தெரிவித்தது.
தரை இறங்கிய பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் துவாரம் ஒன்று ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டதாக ‘எஃப்ஏஏ’ இணையத்தளம் கூறியது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்து தரப்பட்டதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

