கேத்தே திரையரங்குகளின் நுழைவுச்சீட்டு முன்பதிவுக்கான இணையத்தளம், செயலி, மின்சேவை முகப்புகள் அனைத்தும் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.
கணினிக் கோளாற்றால் இவை அனைத்தும் மூன்று வாரங்களுக்குமேல் முடங்கியிருந்தன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த கேத்தே திரையரங்குகளின் பேச்சாளர், மே 20ஆம் தேதி தங்கள் இணையத்தளம், செயலி, மின்சேவை முகப்பு ஆகியவை வழக்கநிலைக்குத் திரும்பி, முழுமையாகச் செயல்படுவதை உறுதிசெய்தார்.
இந்த விவகாரத்திற்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இணையத்தளம், செயலி போன்றவை பாதிக்கப்பட்டதாக கேத்தே திரையரங்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. மறுநாள் மேலும் பல சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏப்ரல் 30ஆம் தேதி, ரொக்கக் கட்டணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


