சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டம் மே மாதம் 12ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் பேரவைத் தலைவர் ஹாஜி முஹம்மது பிலால் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் முனைவர் முஹைதீன் நிசார் ஆண்டறிக்கையை வழங்கினார். பொருளாளர் ஹாஜி முஹம்மது அசீம் ஆண்டிறுதி வரவுசெலவு மற்றும் இருப்புநிலை அறிக்கையை வாசித்தார்.
கடந்த இரண்டாண்டுகளில் பேரவையின் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சென்ற பருவத்திற்கான மேலாண்மைக் குழு கலைக்கப்பட்டு புதிய குழுவுக்கான தேர்தல் நடைபெற்றது.
பிலால் மீண்டும் தலைவராகத் தேர்வு
இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவராக முஹம்மது பிலால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக நு. அப்துல் மாலிக், பொருளாளராக எஸ். எம். ஜெகபர் சாதிக், துணைத்தலைவராக உபைதலி, உதவித் தலைவர்களாக ஆதம் சாஹுல் ஹமீது, கோதரி ஷா இப்ராஹீம், ஷேக் அலாவுதீன், துணைப் பொதுச் செயலாளராக பி.எம். முஹம்மது ஜாஃபர், உதவிப் பொதுச் செயலாளராக ஏ.ஆர். அப்துல் ரஹ்மான், உதவிப் பொருளாளராக ஒய். எஸ். யூசுஃப்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரிகளாக பேரவையின் ஆலோசகர்கள் மஞ்சா ஹபீப், சமாதான நீதிபதி ஹாஜா நிஜாமுத்தீன், சீனி ஜாஃபர் கனி ஆகியோர் செயல்பட்டனர்.
பதினெட்டு இந்திய முஸ்லிம் இணை அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள இந்த பேரவை 1992ஆம் ஆண்டு நிறுவப்பட பெரும் பங்காற்றிய தற்போதைய குவைத்துக்கான சிங்கப்பூர் தூதர் ஹாஜி ஜெயினுலாபிதீன் ரஷீத் பேரவையின் புதிய மேலாண்மைக் குழுவுக்கும் பேரவை உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பேரவைத் தலைவர் சென்ற மேலாண்மைக் குழுவில் தம்மோடு சேவையாற்றிய நிர்வாகிகளுக்கும், பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, புதிய குழுவை வாழ்த்துக்கூறி வரவேற்றார்.
செய்தி: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை

