2023ஆம் ஆண்டில் தரவுக் கசிவால் சொகுசு கைக்கடிகார நிறுவனமான ‘கோர்ட்டினா வாட்ச்’ பாதிக்கப்பட்டது.
அதில் கிட்டத்தட்ட 4,000 தனிநபர்களின் முழுப் பெயர், தொடர்பு எண் உட்பட மற்ற தனிப்பட்ட விவரங்களும் திருடப்பட்டு ‘டார்க் வெப்’பில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
சிலரது வங்கிக் கணக்கு எண்களும் திருடப்பட்டன.
தரவுக் கசிவின் தாக்கம், நிறுவனம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகள், விசாரணையின்போது அதிகாரிகளுடன் ஒத்துழைத்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படாது என்று தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பு ஆணையம் மே 23ல் முடிவெடுத்தது.
அபராதத்துக்கு மாறாக, இணையப் பாதுகாப்பு தணிக்கை செய்துகொள்ளும்படி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, இணையப் பாதுகாப்பு தணிக்கைச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் சேவையை ‘கோர்ட்டினா வாட்ச்’ நிறுவனம் நாட வேண்டும்.

