தொலைபேசி மூலம் டிபிஎஸ் வங்கியைப் பலமுறை அழைத்து அதன் தலைமையகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்போவதாக ஆடவர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீங்கு விளைவிக்கக்கூடிய சூழ்நிலை தொடர்பில் அவர் பொய்த் தகவல் அளித்ததாக மே 29ல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
34 வயது ஆங் செங் ஷின் மிரட்டல் மட்டுமே விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவரால் டிபிஎஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கான சாத்தியம் இல்லை என்று காவல்துறை மே 28ல் தெரிவித்தது.
சாங்கி பிஸ்னஸ் பார்க் கிரசெண்ட்டில் உள்ள டிபிஎஸ் ஏஷியா ஹப், மரினா பொலிவார்ட்டில் உள்ள டிபிஎஸ் ஏஷியா சென்ட்ரல் ஆகிய இடங்களில் சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியது.
மே 27ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆங் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிபிஎஸ் வங்கி காவல்துறையிடம் புகார் அளித்தது. அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் ஆங் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

