அங் மோ கியோ அவென்யூ 8ல் உள்ள மூவறை வீவக வீட்டின் பிரதான அறையின் மேல் பகுதிக்கும் கீழ்ப் பகுதிக்கும் இடையே சட்டவிரோதமாக குறுக்குச் சுவர் எழுப்பப்பட்டது.
குறுக்குச் சுவர் எழுப்பப்பட்டு அதற்கு மேல் கட்டில் ஒன்று வைக்கப்பட்டது.
குறுக்குச் சுவருக்குக் கீழே, சொகுசு நாற்காலி, தொலைக்காட்சி, அலமாரி போன்றவை வைக்கப்பட்டன.
அதையடுத்து, அந்த வீடு விற்பனைக்கு விடப்பட்டது. அவ்வீட்டிற்கு $480,000 கேட்கப்பட்டது.
விலை அதிகமாக இருந்தபோதும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வீட்டை வாங்க பலர் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குறுக்குச் சுவரைக் கட்டுவதற்கு முன்பு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) அனுமதியை வீட்டின் உரிமையாளர் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, அந்தக் குறுக்குச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, வீவக வீட்டு அறையில் குறுக்குச் சுவரை எழுப்புவது விதிமுறைகளுக்கு எதிரானது என்று வீட்டின் உரிமையாளரிடம் வீவக அதிகாரிகள் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அந்த வீடு தொடர்பான விளம்பரம் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.
குறுக்குச் சுவரை அமைக்க வீட்டின் உரிமையாளர் $20,000 செலவழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வீட்டை இப்போதைக்கு விற்கப்போவதில்லை என்றும் குறுக்குச் சுவரை இடிக்கப்போவதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

