எஸ்கியூ321: குறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதி

எஸ்கியூ321: குறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதி

2 mins read
c8427c4f-6bc8-48dc-be27-c604786ee6d2
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் எஸ்கியூ321 மிகக் கடுமையாக ஆட்டங்கண்டதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

அண்மையில் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (எஸ்கியூ321) கடுமையாக ஆட்டங்கண்டது.

இதில் ஒருவர் மாண்டார். பலர் காயமடைந்தனர்.

விமானம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டது.

காயமடைந்தோர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முகத்திலும் முதுகெலம்பிலும் காயங்கள் ஏற்பட்ட சிங்கப்பூர் பயணி ஒருவர் பேங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவர் தற்போது மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கழுத்து, தோள்பட்டையில் வலி காரணமாக அவர் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று சிங்கப்பூர் ஐஎச்எச் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

இந்த நிறுவனம் கிளெனிகல்ஸ் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனை, பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனை ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

இதற்கிடையே, ஜூன் 4ஆம் தேதி மாலை 5.30 மணி நிலவரப்படி எஸ்கியூ321ல் பயணம் செய்து காயமடைந்தவர்களில் 20 பேர் பேங்காக்கில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள், விமானச் சிப்பந்திகள் ஆகியோருக்கு உதவி வழங்க கடப்பாடு கொண்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

அவர்களது குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் உதவி வழங்கப்படும் என்று அது உறுதி அளித்தது.

இந்நிலையில், flight321help.com எனும் இணையப்பக்கத்தை இரண்டு பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பயணிகள் அதைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம். புதிய இணையப்பக்கம் மூலம் ஆலோசனை பெறலாம்.

ஜூன் 4ஆம் தேதி நிலவரப்படி அதில் பத்து பேர் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்