குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகமான குழந்தைகள் வாசிப்புத் திட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
திருவாட்டி ஃபெப்ரி வுலாண்டரிசின் நான்கு, ஏழு, எட்டு, ஒன்பது வயதுகளில் உள்ள குழந்தைகள் சனிக்கிழமைகளில் மெக்ஃபர்சன் சமூக மன்றத்தில் நடைபெறும் வாசிப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
‘ரீடிங் ரூட்ஸ்’ எனும் சமூக சேவை அமைப்பு அந்த வாசிப்புத் திட்டத்தை நடத்தி வருகிறது.
நான்கு வயது முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளை அது இலக்காகக் கொண்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளாக வாசிப்புத் திட்டம் அது சேவையாற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாதுகாப்பு அதிகாரியை மணந்துகொண்ட இல்லத்தரசியான திருவாட்டி ஃபெப்ரி, 39, “எங்களுடையது குறைந்த வருமானக் குடும்பமாக இருப்பதால் துணைப்பாடங்களுக்கு எங்களால் பணம் கட்ட முடியாது. சில ஆண்டுகளாக எங்களுடைய குழந்தைகள் இலவச வாசிப்புத் திட்டத்தில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
அவருடைய குழந்தைகள், ‘ரீடிங் ரூட்ஸ்’ திட்டத்தின் மூலம் படிக்கவும் படித்து ரசிக்கவும் கற்றுக் கொண்டனர். வாரந்திர வகுப்புகளுக்குப் பிறகு குழந்தைகள் அடிக்கடி திருமதி பெப்ரியை அருகிலுள்ள கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சில சமயங்களில் அவரது குழந்தைகள் தாங்கள் படித்தவற்றைக் கொண்டு புதிர் கேள்விகளை உருவாக்குகின்றனர். அவர்களுடைய உடன்பிறப்புகள் அதற்குப் பதிலளித்தால் அவர்கள் இனிப்புகளை வழங்குகின்றனர்.
பள்ளியிலும் குழந்தைகளின் நம்பிக்கை மேம்பட்டுள்ளது என்று திருவாட்டி ஃபெப்ரி குறிப்பிடுகிறார்.
“என்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமல்லாமல் மலாய் மொழியையும் கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்,” என்றார் அவர்.
தொடக்கநிலை 4ல் படிக்கும் அவரது மூத்த பிள்ளையான யூசுஃப் ஃபச்ரி ஃபிக்ரியான்ஸியா, தொடக்கநிலை 3ல் தனது கல்வி செயல்திறனுக்காக ஒரு விருதையும் தொடக்கநிலை 2ல் தனது தாய்மொழி பாடத்தில் “டாப் ரீடர்” விருதையும் வென்றுள்ளார்.
அவரது மூத்த பிள்ளைகளும் தங்கள் ஆசிரியர்களிடம் வீட்டுப்பாடம் பற்றிய கேள்விகளை தயங்காமல் கேட்கின்றனர். இதற்கு முன்பு அவர்கள் அப்படி துணிந்து கேட்டதில்லை என்கிறார் திருமதி ஃபெப்ரி.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை இலக்காகக் கொண்ட தேசிய நூலக வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் வாசிப்புத் திட்டங்களிலும் அண்மையில் அதிகமானோர் சேர்ந்து வருகின்றனர்.
இது போன்ற இலவச அல்லது அதிக மானியத்துடன் நடத்தப்படும் வாசிப்புத் திட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்பு சில பாலர் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை வாசிக்க அறிந்திருக்க மாட்டார்கள் என்று தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இவர்களில் சிலருக்கு கண்டறியப்படாத டிஸ்லெக்ஸியா போன்ற கற்றல் குறைபாடு இருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சில வாசிப்புத் திட்டங்கள், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவில் உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
தேசிய அளவிலான ‘கிட்ஸ்ரீட்’ திட்டத்திலும் அதிகமான குழந்தைகள் பங்கேற்பதாக தேசிய நூலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நான்கு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு அந்தத் திட்டம் வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. 2019ல் அதில் 3,300 குழந்தைகள் பங்கேற்றனர். 2023ல் அந்த எண்ணிக்கை 3,500க்கு அதிகரித்துள்ளது.