சிங்கப்பூரில் குறுகியகால தங்குமிடச் சேவை வழங்குவதாக ஏர்பிஎன்பி தளத்தில் செய்யப்பட்டிருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
கூட்டுரிமைக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளையும் இரண்டு அல்லது மூன்று இரவுகளுக்கு வாடகைக்கு எடுத்துத் தங்கலாம் என்று ஏர்பிஎன்பி தளத்தில் 15க்கும் அதிகமான விளம்பரங்கள் இருந்ததாக சிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதுபோன்ற சில விளம்பரங்கள் மாதக் கணக்கில் அந்தத் தளத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிஎன்ஏ செய்தி வெளியிட்டதும் அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டன.
சிங்கப்பூரில் ஏர்பிஎன்பி தளத்தில் விளம்பரம் செய்வோர் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று ஏர்பிஎன்பி நினைவூட்டியுள்ளது.
சிங்கப்பூரில் தனியார் வீடுகளை வாடகைக்கு விட விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் அவற்றைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாடகைக்கு விட விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் அவற்றைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும்.

