இளம் பிள்ளைகள் உள்ள குடும்பத்தார், பெற்றோராகப்போகும் தம்பதியர் ஆகியோர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் உள்ள சுகாதார, சமுதாய சேவைகளை எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘ஃபேமிலிநெக்ஸ் அட் அவர் தெம்பனிஸ் ஹப்’ என்ற இடத்தில் சமூக தாதியர் குடும்பத் திட்டமிடல் முதல் பிள்ளைப்பேற்றுக்குப் பின் குழந்தையின் ஆரோக்கியம், பிள்ளைப்பேற்றுக்குப் பின் உடல் தேறி வருவது எனப் பல்வேறு சேவையை இளம் தாய்மார்களுக்கு வழங்குகின்றனர்.
‘ஃபேமிலி நெக்சஸ்’ என்ற இந்த சேவை மன்றத்தின் திறப்பு விழாவில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃபிலி, “ஃபேமிலி நெக்சஸ் சேவை மன்றத்தில் பலதரப்பட்ட சுகாதார, திருமண, பெற்றோர் சேவைகளைக் குடும்பங்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே பெறலாம்,” என்று கூறினார்.
இளம் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு ஆதரவு தரும் வகையில், பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வசதியாகப் பெறுவது இது குறித்த அறிக்கையில் இருக்கும் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
பல அமைப்புகள் அடங்கிய பணிக்குழு இந்த அறிக்கையை வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அன்று வெளியிட்டது. பிள்ளைகள், தாய்மார்களின் சுகாதாரம் குறித்த இந்த அறிக்கை வயதானபின் குழந்தை பெற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் பற்றியும் ஆராய்ந்துள்ளது.
இந்தத் தாய்-சேய் நலப் பணிக்குழு, அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையில் அமைந்துள்ளது. சுகாதார, சமுதாய, கல்வித் துறைகளில் பணியாற்றுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரை இது உள்ளடக்கியுள்ளது. அதன் அறிக்கை, பெற்றோராகப்போகும் தம்பதியருக்கு ஆதரவு வழங்குவது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஒருங்கிணைந்த உதவி வழங்குதல் ஆகியவற்றுக்குத் திட்டங்களை வகுத்துள்ளது.
இந்த அறிக்கை அளித்த ஒன்பது பரிந்துரைகளைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“இதுவரை பரிந்துரைக்கப்பட்ட 48 திட்டங்களில் பாதிக்கும் மேலானவற்றைச் செயல்படுத்தியுள்ளோம். இதில் நாங்கள் இதுவரை நல்ல பலன்களை மட்டுமே காண்கிறோம்,” என்றார் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.