பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையான பிஎம்ஜேயின் வெளியீடான பிஎம்ஜே பப்ளிக் ஹெல்த் எனும் அனைத்துலக மருத்துவ சஞ்சிகை ஜூன் 3ஆம் தேதி வெளியான கட்டுரை குறித்து விளக்கமளித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான அண்மைய ஆய்வு முடிவுகள் குறித்த கட்டுரை அது.
அதில், 47 மேற்கத்திய நாடுகளில் 2021ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் மரணங்கள் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆண்டில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் அமலில் இருந்ததுடன் தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டதை ஆய்வு சுட்டியது.
நெதர்லாந்தில் குழந்தைகளுக்குப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் நிலையத்தின் வல்லுநர்கள் இருவரும் தனியார் ஆய்வாளர் ஒருவரும் அந்த ஆய்வை மேற்கொண்டனர்.
டென்மார்க்கில் சில எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை கண்டறியப்பட்டது குறித்த தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஜெர்மனியில் கொவிட்-19 தடுப்பூசி பயன்படுத்தத் தொடங்கிய அதேவேளையில் மரண எண்ணிக்கை உயர்ந்தது குறித்தும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
உலகெங்குமுள்ள பல்வேறு செய்தி நிறுவனங்கள், கொவிட்-19 தடுப்பூசியால் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்ததாக இந்த ஆய்வு கூறுவதாகத் தகவல் வெளியிட்ட நிலையில் ஜூன் 7ஆம் தேதி பிஎம்ஜே, “ஆய்வு அத்தகைய தொடர்பு எதையும் நிரூபிக்கவில்லை,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.


