இவ்வாண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எஸ்டி என்ஜினியரிங் நிறுவனம், ஐரோப்பாவிலிருந்து 100 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தை நடத்தும் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் குழுமம் இம்மாதம் ஏழாம் தேதியன்று இத்தகவலை வெளியிட்டது. குறிப்பாக 155எம்எம், 40 எம்எம் ரக ஆயுதங்களை வாங்க விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்டி என்ஜினியரிங் தெரிவித்தது. அந்த ஆயுதங்கள் நேட்டோ கூட்டமைப்பு தரநிலைக்கு உட்பட்டவையாகும்.
ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்த விவரங்கள், ஆயுதங்களை வாங்குவோரின் தகவல்கள் ஆகியவற்றை எஸ்டி என்ஜினியரிங் வெளியிடவில்லை.
தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவுக்குப் பதிலாக 32 உறுப்பு நாடுகளின் ராணுவங்களை உள்ளடக்கும் நேட்டோ கூட்டமைப்பு இனி உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ள பிரிவை உள்ளடக்கும் எஸ்டி என்ஜினியரிங்கின் தற்காப்பு, பொதுப் பாதுகாப்புப் பிரிவு, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 1.7 பில்லியன் வெள்ளி மதிப்பிலான விண்ணப்பங்களைப் பெற்றது. இம்மாதம் 14ஆம் தேதியன்று எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தின் பங்கு விலை 1.5 விழுக்காடு குறைந்து 3.98 வெள்ளியாகப் பதிவானது.

