ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் சிங்கப்பூரிலிருந்து பயணம் மேற்கொண்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையுடன் நீண்ட வாரயிறுதியும் ஜூன் மாதப் பள்ளி விடுமுறையும் சேர்ந்து வந்ததே இதற்குக் காரணம் என்று ஆணையம் மேலும் குறிப்பிட்டது.
ஜூன் 14ஆம் தேதி ஒரே நாளில் 530,000 க்கும் மேற்பட்டோர் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாகச் சிங்கப்பூரிலிருந்து பயணம் மேற்கொண்டவர்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை என ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறியது.
ஜூன் 13ஆம் தேதி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் 510,000 பேருக்குமேல் குடிநுழைவுச் சோதனையைக் கடந்து சென்றனர்.
அதனுடன் ஒப்பிடும்போது ஜூன் 14ஆம் தேதி அதிகமானோர் இந்த இரு நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்த சென்றதாக ஆணையம் தெரிவித்தது.
“நிலச் சோதனைச்சாவடிகளைக் கடந்த சென்றவர்களில் பெரும்பாலானோர் காரில் பயணம் மேற்கொண்டவர்கள். இதனால், நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,” என்று அது மேலும் கூறியது.
போக்குவரத்து நிலைமைகளைக் கண்காணித்து வருவதாகவும் மாறிவரும் போக்குவரத்து நிலைமையை நிர்வகிக்க அதிகாரிகளை நியமிப்பதாகவும் அது தெரிவித்தது.
ஜூன் மாத பள்ளி விடுமுறைகள் ஜூன் 23ஆம் தேதியுடன் முடிவடைவதால் இரு நிலச் சோதனைச் சாவடிகளிலும் போக்குவரத்து அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நிலவரங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஆணையம் நினைவூட்டியது.

