சிங்கப்பூர் ஏர்லைன்சும் (எஸ்ஐஏ), இந்தோனீசியாவின் கருடா இந்தோனீசியாவும் இணைந்து செயல்படுவதற்காக செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இரு நிறுவனங்களும் பலதரப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதற்கு ஒப்பந்தம் வகை செய்கிறது. இதனால் சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளின் விமான நிறுவனங்கள் பலனடையும் என்று ஜூலை 5ஆம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையே வருமானப் பகிர்வு அடிப்படையில் விமானச் சேவைகளை இயக்குவது, பயணிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவதற்காக விமான நேரங்களை ஒருங்கிணைப்பது, சிங்கப்பூர், இந்தோனீசியா, மற்ற நாடுகளுக்கு இடையே தங்கு தடையின்றி விமானச் சேவைகளை வழங்குவது, கூட்டு விற்பனை வாய்ப்புகளை கண்டறிவது உள்ளிட்டவை கூட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.
கருடா இந்தோனீசியா விமான நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இர்ஃபான் செடியபுத்ரா, கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றார்.
இரு நாடுகளின் விமானக் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதோடு சேவைத் தரமும் மேம்படுகிறது என்று அவர் கூறினார்.
எஸ்ஐஏ தலைமை நிர்வாகியான கோ சூன் போங், இந்தோனீசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் தொடர்புகளை மேம்படுத்த இரு நிறுவனங்களும் கடப்பாடு கொண்டுள்ளன. புதிய பங்காளித்துவ ஒப்பந்தம் அதையே காட்டுகிறது என்று கூறினார்.

