ஹவ்காங்கில் உள்ள பிரைட் விஷன் சமூக மருத்துவமனை உருமாறுகிறது.
எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அது மனநல தாதிமை இல்லமாக மாற்றப்படுவதாக சிஎன்ஏ எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது.
அதில், தற்போது 318 படுக்கைகள் இருக்கின்றன. இது, முதல் சமூக மருத்துவமனையும்கூட.
மனநல தாதிமை இல்லமாக அந்த மருத்துவமனை மாற்றப்படுவதால் நாட்டில் மனநல நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகரிக்கும்.
புதிய மாற்றம் குறித்து அதிக விவரங்களை அமைச்சு வெளியிடவில்லை.
ஆனால் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளுக்கு ஏற்ப அது வடிவமைக்கப்படும் என்று அது கூறியது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சிங்கப்பூரின் தேசிய மனநலம் மற்றும் நல்வாழ்வு உத்தியின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட இரண்டு மனநல மருத்துவ இல்லங்களில் இதுவும் ஒன்று.
தற்போது பயன்பாட்டில் இல்லாத முந்தைய சுகாதாரப் பராமரிப்பு வசதியும் புதிய மனநல இல்லமாக மாற்றப்படும் என்று சிஎன்ஏ அறிகிறது.
கொள்ளைநோய் பரவலின்போது இயோ சூ காங் அருகே அமைந்துள்ள பிரைட் விஷன் சமூக மருத்துவமனை ‘கொவிட்-19’ பராமரிப்பு நிலையமாகச் செயல்பட்டது. தற்போது அது பயன்பாட்டில் இல்லை.
2001ஆம் ஆண்டில் இந்தக் கட்டடம் திறக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகச் சவால்கள் காரணமாக அதன் உரிமை சிங்கப்பூரின் ஆகப்பெரிய சுகாதார நிலையமான சிங்ஹெல்த்துக்கு மாற்றப்பட்டது.

