சிங்கப்பூரில் ஆகச் சிறந்த முதலாளிகளாக டிபிஎஸ் வங்கியும் ஜேபி மோர்கனும் ஆய்வு ஒன்றில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது.
வேலைகள் தொடர்பான தளமான eFinancialCareers நடத்திய ஆய்வில் 500 பேர் பங்கேற்றனர். அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கருத்துகளைக் கொண்டு இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆய்வு நடத்தப்பட்டது.
சம்பளம் குறித்த திருப்திநிலை, வேலை-வாழ்க்கை சமநிலை, நீக்குப்போக்குத்தன்மை, பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் போன்ற பிரிவுகள் வகுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
அனைத்துப் பிரிவுகளிலும் டிபிஎஸ் வங்கியும் ஜேபி மோர்கனும் சிறந்த நிலைகளைப் பிடித்தன.
ஜேபி மோர்கனை ஆகச் சிறந்த முதலாளி என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 13 விழுக்காட்டினர் (67 பேர்) குறிப்பிட்டனர்.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 12 விழுக்காட்டினர் (66 பேர்) டிபிஎஸ் வங்கியைத் தேர்ந்தெடுத்தனர்.
பெரும்பாலான பிரிவுகளில் பேங்க் ஆஃப் சிங்கப்பூருக்கும் அதிக ஆதரவு (ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 விழுக்காட்டினர்) தெரிவிக்கப்பட்டது.
வேலை-வாழ்க்கை சமநிலைக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆய்வில் பங்கேற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

