மூளையின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிய உதவும் ஒரு புதிய பயனுள்ள கருவியை டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒளி வெளிப்படும்போது மாறும் புரதத்தைப் பயன்படுத்தி மூளையில் இருக்கும் உயிரணுக்களை அமைதிபடுத்தி அதன்மூலம் மூளையின் செயல்பாட்டை இந்தக் கருவியைப் பயன்படுத்தி நன்கு அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கான ஆய்வுக்கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற பல்துறை சஞ்சிகையில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
பார்கின்சன், மனச்சோர்வு போன்ற நரம்பியல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளின் அடிப்படையிலான மூளை சுற்றுகளை ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தி நன்கு புரிந்துகொள்ள முடியும் என இந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
மேலும், மீன், புழு, ஈ ஆகிய உயிரினங்களின் மூளை உயிரணுக்களின் செயல்பாட்டை அமைதிபடுத்த குறிப்பிட்ட பொட்டாசியம்-அயன் ஒளியலை வரிசையை ஒளியால் தூண்டப்படலாம் என்று ஆராய்ச்சி குழு இக்கட்டுரையில் எடுத்துரைத்தது.
“இந்த பொட்டாசியம்-அயன் ஒளியலை வரிசை உயிரணு மென்சவ்வுகளின் வாயில்கள் போல் செயல்படுகின்றன. அவை வெளிச்சத்திற்கு வெளிப்படும் போது, இந்த வாயில்கள் திறந்து பொட்டாசியம் அயனியாக வெளிவருகின்றன. இது மூளை உயிரணுக்களின் செயல்பாட்டை அமைதிப்படுத்த உதவுகிறது,” என்று ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஸ்டானிஸ்லாவ் ஓட் கூறினார்.