1எம்டிபி மோசடி வழக்குடன் தொடர்புடைய ஏறத்தாழ $164 மில்லியன் சொத்துகள் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை ஜூலை 16ஆம் தேதியன்று தெரிவித்தது.
அவற்றில் மலேசிய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் ஜோ லோ என்று அழைக்கப்படும் லோ டேக் ஜோ மற்றும் அவரது குடும்பத்தாருடன் தொடர்புடைய கிட்டத்தட்ட $101 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துகளும் அடங்கும்.
மலேசிய அரசாங்க முதலீட்டு நிதியான 1எம்டிபியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை ஜோ லோ கையாடியதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் முடங்கிக் கிடக்கும் 1எம்டிபி சொத்துகளை மலேசியாவிடம் திருப்பி ஒப்படைக்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மற்றும் வெளிநாட்டு காவல்துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட 1எம்டிபி தொடர்பான ஏறத்தாழ $103 மில்லியன் சொத்துகளை மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க தேவையான நீதிமன்ற உத்தரவை சிங்கப்பூர் அதிகாரிகள் பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.