கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், ஃபாரஸ்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒரு தீவை வரியில்லா மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்தை இயற்றியிருக்கிறது. மெகாநகரான அதனை உயிர்ப்பிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
லபுவான், லங்காவி, தியோமான், பங்கோர் ஆகியவற்றுடன் புலாவ் சத்துவை வரியில்லா மண்டலமாக மாற்ற ஐந்து திருத்த மசோதாக்களுக்கு நாடாளுமன்ற கீழவை ஜூலை 17ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்தப் புதிய சட்டத்தை செனட் அங்கீகரிக்க வேண்டும்.
கடந்த 2023ஆம் ஆண்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஃபாரஸ்ட் சிட்டியை புதிய சிறப்பு நிதி மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் சிங்கப்பூருடன் சேர்ந்து எல்லைத் தாண்டிய பொருளியல் மண்டலத்தை உருவாக்கும் முயற்சியிலும் மலேசியா இறங்கியுள்ளது. இதில் பெரிய அளவிலான சொத்து மேம்பாட்டுத் திட்டங்களும் அடங்கியுள்ளன. இது, சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஜோகூருக்கும் இடையிலான வர்த்தகத்தை பெருமளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் எனும் சொத்து மேம்பாட்டு நிறுவனம் ஃபாரஸ்ட் சிட்டியை நூறு பில்லியன் யுஎஸ் டாலர் செலவில் உருவாக்கி வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானம் தொடங்கப்பட்டாலும் பல்வேறு சவால்களுக்கு இடையே இந்நகரம் சிக்கி மீண்டு வராமல் தவிக்கிறது.
கடந்த டிசம்பரில் ஜோகூர் சுல்தானாகிய மலேசியாவின் மாமன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர், சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் பாதை ‘ஃபாரஸ்ட் சிட்டி’ வழியாகச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.