சிங்கப்பூரின் தேசிய நீர் முகமையான பொதுப் பயனீட்டுக் கழகம் தன்னிடமுள்ள சில டீசல் வாகனங்களைக் காலப்போக்கில் கைவிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றுக்குப் பதில் மின்சார வாகனங்களைப் பெற உள்ளது.
இதைத் தொடர்ந்து கழகம் ஜூலையில் 47 மின்சார வாகனங்களுக்கான ஒப்பந்தத்தை சைக்கிள் அண்ட் கேரேஜ் நிறுவனத்தின் இரு கிளை நிறுவனங்களுக்கு வழங்கியது. இதன் மதிப்பு $4.96 மில்லியன் எனக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் வேன்கள், டிரக் வாகனங்கள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
அவை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உதவுவது, நீரின் தரத்தைப் பரிசோதிப்பது, இடையூறுகளைச் சந்திக்கும் இடங்களுக்கு நீர் விநியோகம் செய்வது போன்ற கழகத்தின் அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
பொதுப் பயனீட்டுக் கழகத்திடம் தற்பொழுது கிட்டத்தட்ட 180 வாகனங்கள் உள்ளன.
மின்சார வாகனங்களுக்கு மாறும் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட கழகத்தின் நீடித்த நிலைத்தன்மைப் பிரிவின் தலைமை அதிகாரியான திரு ரிட்சுவான், இதில் கழகம் கவனத்தில் எடுத்துக்கொண்ட அம்சங்களில் ஒன்று, அதன் அன்றாட தேவைகளுக்கு ஏற்ற வாகனங்களை அடையாளம் காண்பது என்றார்.