இயூ டீ சமூக மன்றத்திலிருந்து தேசிய தின இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கான டிக்கெட் விற்பனையில் வசூலான பணத்திலிருந்து $12,000ஐக் கையாடிய அத்தொகுதி துணை இயக்குநருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிம் ஜியா ஷெங் (வயது 37), என்ற மக்கள் கழக ஊழியர் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார். அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 14ஆம் தேதி) அன்று தம்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்பொழுது அவர் தான் வகித்த பதவியிலிருந்து விலகிவிட்டார்.
திரு லிம் தான் களவாடிய பணத்தை முழுமையாக திருப்பித் தந்து விட்டார் என்று கூறிய அவரது வழக்கறிஞர் ஜேரட் லீ, அவரிடம் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகத் தெரிவித்தார். அதனால், அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகச் சொன்னார்.
திரு லிம் தற்பொழுது தமது சூதாட்டப் பழக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டார் என்றும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக தான் இருக்கவில்லை என்பதை எண்ணி வருந்துவதாகவும் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் கூறினார்.

