மிதமான அறிவுத் திறன் குறைபாடு உள்ள ஆடவர் ஒருவர் பொதுவெளியில் சிறுவர்களை மானபங்கப்படுத்தினார். அவருக்கு 15 மாத சிறை, 2 பிரம்படிகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த ஆடவர் மானபங்கப்படுத்திய சிறுவர்களில் ஒருவருக்கு வயது 9.
ஓங் கியன் பெங் என்ற ஆடவருக்கு புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 14) தண்டனை விதித்த நீதிபதி கெல்லி ஹோ, அந்த ஆடவர் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் மனநலக் கழகத்தின் மருத்துவ அறிக்கையை சுட்டிய நீதிபதி, திரு ஓங்கின் அறிவுத்திறன் குறைபாடு அவருடைய சுயகட்டுப்பாடு, எது சரி, எது தவறு என்று முடிவு செய்யும் மதிநுட்பத்தைப் பாதிக்கவில்லை என்று கூறினார்.
“தான் குழந்தைகளைக் குறிவைத்ததை ஓங் ஒப்புக்கொண்டுள்ளார். அவருடைய வாதப்படி அந்தச் சிறுவர்கள் காவல்துறையில் புகார் செய்ய மாட்டார்கள். மாறாக, வயது வந்தவர்கள் காவல் துறையிடம் புகார் அளிக்கக்கூடும்,” என்று நீதிபதி தமது தீர்ப்பில் விளக்கினார்.
இந்தக் குற்றங்களைப் புரிந்தபோது திரு ஓங், வயது 32, பொட்டலம் கட்டுபவராகப் பணிபுரிந்தார். மானபங்கம் செய்தது தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள், பலவந்தமாக நடந்துகொண்டது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை ஓங் ஒப்புக்கொண்டார்.


