அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு அனைவருக்கும் உள்ள கவலையாகும். ஆனால் அந்தச் சுமையைக் குறைக்க ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் ஆன அனைத்து உதவிகளைச் செய்யும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு நாடும் பணவீக்கப் பிரச்சினையை எதிர்நோக்குவதை சுட்டிக் காட்டினார்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பதற்கான காரணங்களைத் தொட்டு அவர் பேசினார்.
“இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் சிக்கலானவை. விநியோகச் சங்கிலித் தொடரில் ஏற்படும் இடையூறுகள், உலகம் முழுவதும் உள்ள வட்டாரப் பூசல்கள் போன்ற வெளிப்புற அம்சங்களை சிங்கப்பூரால் கட்டுப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.
இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க நாங்கள் தொடர்ந்து கூடுதல் ஆதரவை வழங்குவோம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
அண்மையில் வழங்கப்பட்ட சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார். கடந்த ஜூன் மாதம் ஒவ்வொரு சிங்கப்பூரரின் குடும்பத்துக்கு 300 வெள்ளி பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. மேலும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள், பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடிகள் ஜூலையில் வழங்கப்பட்டன.
சமையல் எரிவாயு, மின்சாரக் கட்டண உயர்வுக்கு இடையே இந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

