கலாசார பன்முகத்தன்மை வாய்ந்த சிங்கப்பூரில் ஒற்றுமை, கலாசாரத்தைப் பேணிக் காப்பதன் முக்கியத்துவம் ப்ற்றி பிரதமர் லாரன்ஸ் வோங் சீன மொழியில் ஆற்றிய தமது தேசிய தினப் பேரணி உரையின் முடிவுரையில் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது நாட்டின் வளமான கலாசாரத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துசெல்ல முடியும் என்றும், அதை மேலும் துடிப்பானதாகவும் பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை அளித்தார்.
நாட்டின் வளமான கலாசார பன்முகத்தன்மை, ஹைனானிஸ் கறிச்சோற்றைப் போன்றது என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், அந்த உணவு பல்வேறு கலாசாரங்களின் முக்கிய உணவுக்கூறுகளை ஒன்றிணைப்பதைச் சுட்டினார்.
நோன்யா கோழிக்கறி, இந்திய மணமூட்டிகள், சீனக் குழம்பு முதலியவற்றை உள்ளடக்கிய ஹைனானிஸ் கறிச்சோறு, ஒவ்வோர் இனத்திற்குமெனத் தனித்த கலாசாரம் இருந்தாலும் சிங்கப்பூரின் தனித்துவமான சமூகத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதை அது வெளிப்படுத்துவதாகப் பிரதமர் சொன்னார்.
எனவே, தேசிய தினப் பேரணிக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசரிப்பில் ஹைனானிஸ் கறிச்சோற்றுடன் மலாய், இந்திய உணவு வகைகளும் வழங்கப்படும் என்று ம்பிரதமர் தெரிவித்தார்.

