சாக்கே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான 56 வயது ஏண்டி ஓங் குவீ 15.8 மில்லியன் வெள்ளியைக் கையாடல் செய்திருக்கிறார்.
அவருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) 10.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சாக்கே ஹோல்டிங்ஸ், சிங்கப்பூரில் இயங்கும் உணவு, பான நிறுவனமாகும். அது, சாக்கே சுஷி உணவகங்களை நடத்துகிறது.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கடந்த மே மாதம் ஓங்கின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. நம்பிக்கை துரோகம் இழைத்தது, போலி ஆவணம் தயார்செய்யத் தூண்டியது, உயர் நீதிமன்றத்தில் தெரிந்தே போலி ஆதாரத்தைக் கொடுத்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
அவர்மீதும் மற்ற தரப்புகள்மீதும் உயர் நீதிமன்றத்தில் சாக்கே ஹோல்டிங்ஸ் வழக்கு தொடர்ந்தன. சாக்கே ஹோல்டிங்ஸ், கிரிஃபின் ரியல் எஸ்டேட் இன்வெஸ்மென்ட் ஹோல்டிங்ஸ் (ஜிஆர்ஐஇஎச்) நிறுவனக் குழுமத்தில் அங்கம் வகிக்கிறது.
அதே நீதிமன்ற விசாரணையையடுத்து சுவா வெய் டாட், 41, ஹோ இயூ கோங், 56, என்ற வேறு இரு ஆடவர்கள்மீது இவ்வழக்கின் தொடர்பில் நீதிமன்றத்தில் தெரிந்தே போலி ஆதாரம் தந்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இருவருக்கும் வெள்ளிக்கிழமை ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஏண்டி ஓங், ஹோ, சுவா மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வர் என்றும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


