மாற்றம் காணும் மீத்திறன் கல்வித் திட்டத்தில் மாணவர் எண்ணிக்கை மாறாது: கல்வி அமைச்சர்

மாற்றம் காணும் மீத்திறன் கல்வித் திட்டத்தில் மாணவர் எண்ணிக்கை மாறாது: கல்வி அமைச்சர்

2 mins read
4bcc3b07-dff5-4237-9aff-736cf7693ed2
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) உரையாற்றிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மீத்திறன் கல்விக்குப் பதிலான புதிய அணுகுமுறை தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 30 முதல் 40 வரை என்னும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

பள்ளிசார்ந்த நடவடிக்கைகளுக்காக வகுப்பறை மாணவர் எண்ணிக்கை, மீத்திறன் மாணவர்கள் மற்றும் கற்றலில் அதிக உதவி தேவைப்படுவோர்க்கான பள்ளி நேரத்திற்குப் பிந்திய நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பில் அந்தந்தப் பள்ளிகளே முடிவுசெய்யலாம்.

40 ஆண்டுகளாக நடப்பில் இருந்த மீத்திறன் கல்வித் திட்டத்தில் (ஜிஇபி) ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் திரு சான் இதனைத் தெரிவித்தார்.

“வகுப்பறை மாணவர் எண்ணிக்கை தொடர்பான விவாதத்தைக் கடந்து செல்ல வேண்டிய அவசியத்தில் சிங்கப்பூர் உள்ளது. விவாதம் செய்வதற்குப் பதிலாக மாணவர்களின் கற்பித்தலுக்குப் பயன்படும் தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்தலாம்,” என்றார் அமைச்சர்.

ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்படக் கூடிய கல்வியைக் கொண்டிருக்கும், வழிவழியாகப் பின்பற்றப்படும் பொதுக் கல்வியின் பிரச்சினையைக் களைய விரும்பும் அரசாங்கத்தைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டின் தொடக்கநிலை 1ல் சேரும் மாணவர்களிடம் இருந்து தொடங்கும் மீத்திறன் கல்வித் திட்ட மாற்றங்களின்கீழ், தற்போது இருப்பதைப்போல தொடக்கநிலை 3ல் ஒற்றை, இருகட்டப் பயிற்சிகள் வாயிலாக மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட மாட்டார்கள்.

மாறாக, சிறப்பான, மீத்திறன் ஆற்றலுடைய மாணவர்களுக்கான பள்ளி சார்ந்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அந்த நடவடிக்கைகள் வருங்காலத்தில் அதிக மாணவர்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

தற்போதைய மீத்திறன் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்படும் சராசரி தொடக்கப் பள்ளி மாணவர் எண்ணிக்கை பற்றி செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா வினா எழுப்பி இருந்தார்.

திட்டம் புதுப்பிக்கப்படும்போது எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதும் அவரது கேள்வியாக இருந்தது.

அவற்றுக்குப் பதிலளித்துப் பேசிய திரு சான், “மாணவரின் தேவையைப் பொறுத்து வகுப்பில் உள்ளோரின் எண்ணிக்கை அமையும். தற்போது வெவ்வேறு மாணவர் எண்ணிக்கையிலான வகுப்புகளை பள்ளிகள் கொண்டிருக்கின்றன,” என்றார்.

தற்போதைய மீத்திறன் கல்வித் திட்டத்தை, மாணவர்கள் தங்களது திறன்கள், விருப்பங்களின் அடிப்படையிலான பாடங்களைத் தேர்ந்து எடுக்கும் வகையில் ஏன் மாற்றியமைக்கக் கூடாது என்று ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவா கேட்டார்.

பழைய பெயர்களை நீக்கிவிட்டு இன்னும் புதிய பெயரிலான திட்டத்தை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன என்றும் அவர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் சான், திறமையை அளவிடாமல் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இயங்கும் பழைய முறையில் வகுப்புகளை நடத்தும் சாத்தியம் இல்லை என்றார். வெவ்வேறு திறன்களைக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் சராசரி மாணவருக்கு உரிய பாடத்தை நடத்துவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்