சாலையைக் கடந்துகொண்டிருந்த ஊட்ரம் உயர்நிலைப்பள்ளி மாணவரை கார் ஒன்று மோதியதில் அம்மாணவர் சாலையில் விழுந்தார்.
திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று நடந்த இச்சம்பவத்தில் ஊட்ரம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர், பச்சை விளக்கு தனக்குச் சாதகமாக எரிந்துகொண்டிருந்தபோது சாலையைக் கடக்கத் தொடங்கினார்.
மாணவருக்கு மிக அருகில் இருந்த கார் ஒன்று அவர் கடப்பதற்காக வழிவிட, அடுத்த தடத்தில் இருந்த சிவப்பு நிற ஹோண்டா கார் நிறுத்தாமல் சென்றது.
அப்போது அது மாணவரை மோதியதில் அவர் பறந்து சென்று சற்று தொலைவில் விழுந்தார்.
விழுந்தபின் சிறிது நேரத்திலேயே மாணவர் எழுந்து நின்றதை இணையத்தில் பரவிவரும் காணொளி ஒன்று காட்டுகிறது.
சம்பவம் குறித்து அன்று காலை 7.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்குச் மாணவன் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள மாணவர், நேற்று பள்ளிக்குத் திரும்பியதாக பள்ளியின் துணை முதல்வர் ‘தி நியூ பேப்பர்’ நாளிதழிடம் தெரிவித்தார்.
சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity