மின்சிகரெட்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி பரிசோதித்தபோது மின்சிகரெட் பயன்படுத்திய பல மாணவர்கள் பிடிபட்டனர்.
அந்த மாணவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்ட தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பேச்சாளர், வேறு எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை.
மின்சிகரெட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதனைக் கண்டறியும் கருவியின் ஆற்றலை அந்தத் தொழிற்கல்லூரி பரிசோதித்து வருகிறது.
அந்தக் கருவியைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தையும் அது ஆராய்ந்து வருகிறது.
பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் இதர அமைப்புகளும் மின்சிகரெட் உணர்கருவியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உணர்கருவிப் பரிசோதனையில் கிடைக்கும் தகவல்கள் அத்தகைய அமைப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்று அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி நிறுவனங்கள் தங்களது பாதுகாப்புக் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அந்தத் தகவல்கள் துணைபுரியும் என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
மின்சிகரெட் பயன்படுத்தும் மாணவர்களைப் பிடிக்க பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பள்ளிகள் மின்சிகரெட் உணர்கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றன.