புதிய ஒத்துழைப்பு நடவடிக்கையின் கீழ், இந்த வட்டாரத்தில் உள்ள குடும்பங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டவும் யோசனைகளைத் தெரிவிக்கவும் ஆசியான் உறுப்பு நாடுகள் ஓரணியில் திரள உள்ளன.
‘ஆசியான் குடும்பங்களின் நிலையை புரிந்துகொள்வதற்கான ஒத்துழைப்பு’ என்னும் அந்த நடவடிக்கையில் பங்கேற்று, குடும்பங்கள் தொடர்பான தரவுகளை நாடுகள் பகிர்ந்துகொள்ளும்.
அத்துடன், இந்த வட்டாரத்தில் உள்ள குடும்பங்களின் நிலை பற்றிய எல்லைதாண்டிய ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகளிலும் அவை ஈடுபடும்.
இவ்வாறு செய்வது, குடும்பத்தை மையமாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்கவும் ஆசியச் சூழலில் குடும்ப நடைமுறைகளைச் செம்மைப்படுத்தவும் சிங்கப்பூருக்கு உதவும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இதனைத் தெரிவித்து உள்ளார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற ஆசிய குடும்ப மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார்.
அந்த மாநாட்டுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் ஏற்பாடு செய்திருந்தன.
புதிய ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு ஆசியான் உறுப்பு நாடுகள் நவம்பர் 5ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
சமூக நல மேம்பாடு தொடர்பாக ஆசியான் அமைச்சர்நிலை சிறப்புக் கூட்டத்தில் அந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
குடும்பங்களை ஆதரிப்பதில் அரசாங்கங்களின் முக்கியப் பங்கு பற்றி அந்தக் கூட்டத்தில் ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் விவாதித்தனர்.