கடந்த வார இறுதியில் ‘த காலாங்’கில் உள்ள கூரையிடப்பட்ட ஓட்டப்பந்தயத் தடத்தில், செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்களது பூனைகளையும் நாய்களையும் தள்ளுவண்டிகளில் வைத்து உலா சென்றுவரும் காட்சியைக் காணமுடிந்தது.
அத்துடன், மெக்காவ் கிளிகள் வானில் பறந்து திரிந்ததையும் பார்க்கமுடிந்தது.
தேசிய விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள 888 மீட்டர் நீளமுள்ள கிரேட் ஈஸ்டர்ன் புரொமனாட்டில் ‘குட் பெட் ஃபேர் – கம்போங் எடிஷன்’ எனும் கண்காட்சி நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 22, 23ஆம் தேதிகளில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், விலங்கு நல அமைப்புகளின் கடைகள் இடம்பெற்றிருந்தன.
செல்லப்பிராணி உரிமையாளர்கள் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளுக்கான பொருள்களை விற்கும் கடைகளைப் பார்வையிட்டனர்.
அதேவேளையில், வார இறுதி வெப்பத்தைச் சமாளிக்கச் சில செல்லப்பிராணிகளுக்குக் கையடக்க விசிறிகள்கூட இருந்தன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நிர்வகிக்கும் ‘த காலாங் குழுமம்’, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ‘குட் ஃபேர்ஸ்’ ஆகியவை இணைந்து நடத்திய அந்த இரண்டு நாள் கண்காட்சியில் சீமைப் பெருச்சாலிகள் (கினி பிக்ஸ்), மீன்கள், ஒலியெழுப்பும் கரப்பான்பூச்சிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அந்தக் கண்காட்சியில் வழக்கத்திற்கு மாறான சில விசித்திரமான விலங்குகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
‘டைனி கிங்டம்’ எனும் இயற்கைக் கல்வி, அனுபவ நிலையம் அமைத்த சாவடியில், வருகையாளர்கள் மிகச் சிறிய செல்லப்பிராணிகளில் ஒன்றான எறும்புகளைப் பார்வையிட்டதுடன், இலைப்பூச்சிகளையும் ஒலியெழுப்பும் மடகாஸ்கர் கரப்பான்பூச்சிகளையும் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பார்த்தனர்.
‘சிங்கப்பூர் கப்பி கிளப்’ அமைத்திருந்த சாவடியில், வண்ணமயமான கப்பி மீன்களை வருகையாளர்கள் கண்டு களித்தனர்.
அத்துடன், ‘கேலப் ஸ்டேபிள்’ அமைத்திருந்த சாவடியில், வருகையாளர்கள் குதிரைகளுடன் எப்படிப் பழகுவது என்பதைக் கற்றுக்கொண்டதுடன், அவற்றின்மீது சவாரி செய்து அவற்றுக்கு உணவளிக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.


