சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஆகப் பெரிய மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபரான கம்போடியக் குடிமகன் சூ வென்சியாங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.
சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
அவர் எந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார் என்பதற்கு, “வெளிநாட்டவரின் செல்லுபடியான கடப்பிதழைப் பொறுத்து, அனுப்பப்படும் இடம் தீர்மானிக்கப்படும்,” என்றார் அவர்.
சூ, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி கம்போடியக் குடிமகன் ஆனார். அவர் வனுவாட்டு, சீனா கடப்பிதழ்களையும் கொண்டுள்ளார்.
சூ, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 32 வயதான அவருக்கு ஏப்ரல் 2ஆம் தேதி 13 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்று பில்லியன் வெள்ளிக்கும் மேல் பெறுமான ரொக்கமும் சொத்துகளும் கைப்பற்றப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 வெளிநாட்டவர்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் நபர் அவர்.
சூ சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சூவின் தண்டனைக் காலம் அவர் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து எண்ணப்பட்டால், அவர் ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மெர்வின் சியோங் கூறினார்.