சிங்கப்பூரின் ஆகப் பெரிய கள்ளப் பண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரில் ஒருவர் ஏப்ரல் 2ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.
கம்போடியாவைச் சேர்ந்த சூ வென்சியாங், 32, காணொளி இணைப்பு மூலம் முன்னிலையாவார் என்று நீதிமன்றப் பதிவுகள் தெரிவித்தன.
அவரது வழக்கறிஞர் சமீர் அமிர் மெல்பர், குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான நாள் ஏப்ரல் 2ஆம் தேதி என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிசெய்தார்.
அவர் மேல்விவரங்களைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
சூ வென்சியாங் மொத்தம் 11 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி புக்கிட் தீமாவில் உள்ள உயர்தர சொகுசு பங்களா வீடு ஒன்றில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் கம்போடிய, வனுவாட்டு, சீனக் கடப்பிதழ்கள் இருந்தன. அதற்கு மறுநாள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாக இரண்டு குற்றச்சாடுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
சூ, கைதானதிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.