மத்திய கிழக்கில் தொடரும் போர், உலகெங்கும் விலைவாசியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் பெட்ரோல் விலையும் அதில் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய ஒன்றாகும். போர் தொடங்கியது முதல் அதன் விலை கடந்த மூன்று நாள்களில் இரண்டுமுறை ஏற்றம் கண்டுள்ளது.
இங்கு டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்குடன், பெட்ரோல் டீசல் விலைகளில் சலுகைகள் வழங்கிவருகின்றன.
அந்த நிறுவனங்களின் வளாகங்களில் ஓட்டுநர்களுக்கென பெட்ரோல் நிரப்பும் சேவைகள் உள்ளன. அங்கு பொது பெட்ரோல் நிலையங்கள் போல விலைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை.
பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையங்களைவிட டாக்சி நிறுவனங்களின் விலைகள் சற்று மாறுபட்டிருக்கும். சலுகை விலைகளில் ஓட்டுநர்கள் பெட்ரோல், டீசல்களை நிரப்பிக்கொள்ளலாம். தற்போதுள்ள நிலையில் 34 விழுக்காடு வரை கழிவுகள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுகிறது.
உதாரணமாக ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ நிலையங்கள் வியாழக்கிழமை (மார்ச் 5) அவற்றின் 95-ஆக்டேன் ரக பெட்ரோலின் விலையை உயர்த்தி ஒரு லிட்டருக்கு $2.97 என விற்றன.
ஆயினும் கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி சேவை நிறுவனம், அதே ரக பெட்ரோலை டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாகன வாடகைதாரர்களுக்கும் $1.93 என்ற விலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வழங்கியது.
கம்ஃபர்ட் டெல்குரோ வியாழக்கிழமை (மார்ச் 4) 95-ஆக்டேன் ரக பெட்ரோலை $1.88 என்று ஓட்டுநர்களுக்கு விற்றிருந்தாலும் அதன் விலையை தற்போது ஐந்து காசு உயர்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் பொது பெட்ரோல் நிலையங்களில் தரப்படும் சில்லறை விலையைவிட இந்தச் சலுகை விலை ஓட்டுநர்களுக்கு கட்டுப்படியானது என்று நிறுவனம் கருதுகிறது.
தேசிய டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் (NTA) பரிந்துரையுடன் இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
போர் தொடங்கிய பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து அனைத்து ரக பெட்ரோல்களின் சில்லறை விலை ஒன்பது காசு ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலை தொடரும் என்றே பலரின் எதிர்ப்பார்ப்பு.

