கோஜெக் ஓட்டுநரான திருவாட்டி நிக் ஆங் ஓட்டிச் சென்ற வாடகை காரினுள் புகுந்த வெள்ளநீர், ஐந்து நிமிடங்களுக்குள் கணுக்கால்வரை உயர்ந்துவிட்டது. நீர்மட்டம் மேலும் உயரவே, நடுச்சாலையில் காரை நிறுத்திவிட்டு, வெளியேறிவிடுவது என்று திருவாட்டி ஆங்கும் காரின் பின்னிருக்கையில் இருந்த பயணியும் முடிவுசெய்தனர்.
“காரின் விசையை முடுக்கி, வேகமாகச் சென்றுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், சாலை நடுவில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததை உணரவில்லை. அப்படிச் சென்றிருந்தால் எனது கார் சிக்கி இருக்கலாம். நீர்மட்டம் உயர்ந்தபோதும் நான் பதற்றப்படவில்லை. ஒரு காகிதப் பையில் பொருள்களைப் போட்டு எடுத்துக்கொண்டு, அங்கிருந்து ஓடிவிடத் தயாரானேன்,” என்றார் திருவாட்டி ஆங்.
கனமழை காரணமாக பாசிர் ரிஸ் டிரைவ் 12 - தெம்பனிஸ் அவென்யூ 10 சந்திப்பில் இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 வாகனங்கள் பகுதியளவு மூழ்கி, நின்றுவிட்டன. திருவாட்டி ஆங்கின் காரும் அவற்றில் ஒன்று.
விரைந்து முடிவெடுத்தபோதும் திருவாட்டி ஆங்கின் காரில் மேலும் நீர் புகுந்து, இடுப்பளவு உயரத்தை எட்டிவிட்டது. “மேலும் தாமதித்து இருந்தால் எங்களால் காரின் கதவை திறக்க முடியாமல் போய், உள்ளேயே மாட்டிக்கொள்ள நேர்ந்திருக்கலாம்,” என்றார் அவர்.
பாலர் பள்ளி ஆசிரியையான 39 வயது திருவாட்டி எர்னி முகம்மது யாசிதும் திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். தம் கணவருடன் காரில் வேலைக்குச் சென்றபோது, சாலைச் சந்திப்பு வெள்ள நீரில் மூழ்கியிருந்ததை அவர்கள் கண்டனர்.
“முன்னால் சென்ற கார் ஒருவழியாக வெள்ளத்தைக் கடந்து சென்றுவிட்டது. அவ்வாறே என் கணவரும் முயல, சந்திப்பின் நடுவே கார் மாட்டிக்கொண்டது,” என்றார் திருவாட்டி எர்னி.
இரண்டு நிமிடங்களில் காரினுள் நீர் புகவே, நீர்மட்டம் உயர்ந்து உள்ளேயே சிக்கிக்கொள்வோமோ என்று அஞ்சியதாக அவர் சொன்னார். நீரின் அழுத்தம் மிகுதியாக இருந்ததால் கார் கதவைத் திறப்பதும் எளிதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளியில் வந்தபோது இடுப்பு அளவிற்கு நனைந்துபோனதால் மிகுந்த அதிர்ச்சியும் அச்சமும் அடைந்ததாகக் கூறிய அவர், தமது கார் வெடித்துவிடக்கூடும் என்று நினைத்ததாகவும் சொன்னார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இரு தீயணைப்பு வாகனங்களையும் இரு அவசர மருத்துவ வண்டிகளையும் நிகழ்விடத்திற்கு அனுப்பியது. நான்கு கார்களில் இருந்து ஐவரை மீட்ட படையினர், அவர்களைத் தங்கள் முதுகில் சுமந்து, மேடான பகுதியில் இறக்கி விட்டனர்.
அவர்களில் ஒரே காரில் இருந்த முதியவர்கள் இருவரும் அடங்குவர். அவர்களில் ஒருவர், கால்வலிக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.